இரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல்! - ஈஃபிள் கோபுரம் அணைகிறதா??!

24 பங்குனி 2024 ஞாயிறு 15:22 | பார்வைகள் : 12292
இரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் ஆரம்பம் முதல் உக்ரேனின் பக்கம் பிரான்ஸ் நிற்கிறது. இந்நிலையில், இரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்த தாக்குதலுக்கு ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைத்து மெளனிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22, வெள்ளிக்கிழமை மொஸ்கோ நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. 173 பேர் அதில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தகலோன் தாக்குதலை ஞாபகப்படுத்தும் இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஒவ்வொரு அசம்பாவிதங்களின் போதும் தனது விளக்குகளை அணைத்து இருளில் மூழ்கும் ஈஃபிள் கோபுரம், மேற்படி தாக்குதலுக்கு இதுவரை அதுபோன்ற எந்த அறிவித்தலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், 'ஈஃபிள் கோபுரம் மெளனிக்கவேண்டும். உயிர்கள் யாராக இருந்தாலும் சமம் தான். அவர்களது உயிர்கள் மரியாதை செய்யப்படுதல் வேண்டும்!' என பலர் கருதுக்கள் வெளியிட்டு வருகின்றனர்.