இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 4.6 கிலோ கிராம் தங்கம் பறிமுதல்

5 மாசி 2024 திங்கள் 15:34 | பார்வைகள் : 4166
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 03 கோடி மதிப்பிலான தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவில் சுமார் 11 கோடி 28 இலட்சம் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படவுள்ளதாக திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை திருச்சியிலிருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் முனை மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்திய போது தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர்.
அவரது வண்டியை சோதனை செய்த போது சுமார் 4.634 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடத்தல் தங்கத்தையும், இராமேஸ்வரம் நம்புராஜன் என்பவரை கைது செய்து இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட நம்புராஜனிடம் விசாரணை நடத்தி பின் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை ரூபாவில் சுமார் 11 கோடி 28 இலட்சம் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.