காசா ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்

11 மாசி 2024 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 6865
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதலை மேற்கொண்டது.
அதன் பின் இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது தாக்குதலை தொடர்ந்தும் நடத்தி வருகின்றது.
காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தின் எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அண்மையில் அறிவித்திருந்தார்.
அதோடு , அப்பிரதேசங்களை இலக்கு வைத்து வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்பதால், அங்குள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.
எனினும், காசாவில் பெரும்பாலானவர்கள் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக, காசாவின் சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந் நிலையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.