வவுனியா இரட்டைக்கொலை - சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்

1 ஆவணி 2023 செவ்வாய் 07:53 | பார்வைகள் : 7589
வவுனியா - தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மெதவெத்தியகுளம், சிவபுரம், பாம்பேமடுவ மற்றும் நெலக்குளம் ஆகிய பகுதிகளில் வைத்து நேற்று (31) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகியுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் அங்கிருந்தவர்களை தாக்கி வீட்டிற்கு தீவைத்துள்ளனர்.
இதன்போது 10 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தம்பதி உயிரிழந்தனர்.
02 வயதுடைய ஆண் குழந்தையும், 07 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்களும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். .
முகமூடி அணிந்த குழுவொன்று வீட்டிற்கு தீ வைப்பதும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதுமான சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதுடன், விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.