Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணை

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணை

10 மார்கழி 2023 ஞாயிறு 15:41 | பார்வைகள் : 6375


இலங்கையில் ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

தடைப்பட்ட மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை முறையாக மீட்டெடுத்ததுடன், நேற்றிரவு 11 மணியளவில் இலங்கை மின்சார சபை நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில்  பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முறையான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று மாலை நீர் விநியோகமும் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும், புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின் தடை காரணமாக விக்டோரியா, பொல்கொல்ல, ரன்தெனிகல மற்றும் ரன்டேம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று  தெரிவித்தார்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்