வாகன ஓட்டுநர் உரிமம் 17 வயது முதல், 2024 சுதந்திரமாக வாகனம் ஓட்டலாம்.

28 மார்கழி 2023 வியாழன் 08:06 | பார்வைகள் : 9036
எதிர்வரும் ஜனவரி 2024 முதல் 17 வயதில் வாகனங்களை சுதந்திரமாக செலுத்தும் உரிமை வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. முன்பு 17 வயதில் வாகன ஓட்டுநர் உரிமம் பெறமுடியும்,ஆனால் தனியே சுதந்திரமாக வாகனத்தை செலுத்த 18 வயதுவரை காத்திருக்க வேண்டும்.
இந்த வயது எல்லை குறைப்பு சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவர்களின் கருத்துப்படி "கடந்த 24 ஆண்டுகளில் 18 வயது முதல் 24 வயது வரையான இளையோரின் மரணங்களில் 60% சதவீதத்திற்கும் மேல் வாகன விபத்துகளினால நிகழ்ந்துள்ளது, இந்த வயது எல்லைக் குறைப்பு வாகன விபத்துக்களை மேலும் அதிகரிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் வாகன ஓட்டுநர் பயிற்சியாளர் Bruno Garancher தனது கருத்தை தெரிவிக்கையில் "பெரியவர்களைவிடவும் இளையோர் மிக வேகமாக பயிற்சிகளை கற்றுக் கொள்கிறார்கள். இதனால் விரைவாக அதிக சாரதிகள் வருவார்கள், இந்த நிலை ஒருவகையில் மகிழ்ச்சி, ஆனால் அவதானம் அவசியம் " என்கிறார்.
இவை இவ்வாறு இருக்க,ஐரோப்பிய ஒன்றியம் வெகு விரைவில் புதிய வாகன ஓட்டுநர் உரிமம் சம்மந்தமான சட்டம் ஒன்றை கொண்டுவர ஆலோசித்து வருகிறது. அதில் சாதாரணமான வாகன ஓட்டுநர் உரிமத்தை ஒவ்வொரு 15 ஆண்டுகளும் புதுப்பித்தல், பார ஊர்திகளின் ஓட்டுநர் உரிமத்தை ஒவ்வொரு 5 ஆண்டுகள் புதுப்பித்தல் அவசியமாகிறது.