இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்க சொத்து வரி அறிமுகம் - IMF ஆதரவு

14 மார்கழி 2023 வியாழன் 02:35 | பார்வைகள் : 7163
2025ஆம் ஆண்டில் சொத்து வரி முறையை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் செயல்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மிஷன் தலைவர் பீட்டர் ப்ரூவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இலங்கைக்கான 48 மாத விரிவான கடன் வசதித் திட்டத்தின் முதல் மீளாய்வுத் திட்டம் குறித்து அறிவிப்பதற்காக இன்று (13) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் செய்யப்பட்ட அனைத்து சீர்திருத்தங்களையும் பின்பற்றி, 2025ல் சொத்து வரியை அமல்படுத்துவது, வருவாயை உயர்த்துவதில் முக்கிய அங்கமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது மிக நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறை ஆகும். அத்தகைய வரியை அமல்படுத்துவதற்கு, சொத்தின் சரியான ஆவணங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த வரியை விதிக்க முறையான மதிப்பீட்டு முறை இருக்க வேண்டும் என்றும், சொத்து அதிகம் உள்ளவர்களிடம் அதிக வரி வசூலிக்கும் முறை என்றும் அவர் கூறியுள்ளார்.