ப்ளூ காய்ச்சல் பாதிப்பு தீவிரம்: முக கவசம் அணிவது அவசியம்

25 கார்த்திகை 2023 சனி 10:01 | பார்வைகள் : 5426
அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதில், 'ப்ளூ' வைரஸ்களால் பரவும், 'இன்ப்ளூயன்ஸா' காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது.
இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல்வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை அலட்சியப்படுத்தாமல், மருத்துமவனையில் சிகிச்சை பெற வேண்டும்.
டாக்டர்கள் நோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், 'ஆன்ட்டி வைரல்' மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ தேவையில்லை. அவர்கள் தனிமையில் ஓய்வெடுத்தல் போதுமானது.
அதேநேரம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு, 'ஓசல்டாமிவிர்' என்ற ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.
அதேபோல், தீவிர பாதிப்புக்குள்ளானவர்களை, அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
ஓசல்டாமிவிர் மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.
மருத்துவத் துறையினர், சுகாதார கள பணியாளர்கள் முக கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்களும் முக கவசம் அணிவது அவசியம்.
இவ்வாறு கூறியுள்ளார்.