Paristamil Navigation Paristamil advert login

கைக்குத்தல் அரிசி முட்டை பிரியாணி

கைக்குத்தல் அரிசி முட்டை  பிரியாணி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9844


 இதுவரை பாசுமதி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி போன்றவற்றைக் கொண்டு தான் பிரியாணி செய்திருப்பீர்கள். ஆனால் ப்ரௌன் ரைஸ் எனப்படும் கைக்குத்தல் அரிசியைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம், இந்த அரிசியைக் கொண்டும் பிரியாணி செய்யலாம். சொல்லப்போனால், இந்த அரிசியை அன்றாடம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

அதிலும் பிரியாணி செய்வதற்கு இந்த அரிசியைப் பயன்படுத்தினால், பிரியாணியின் சுவை நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். இங்கு கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்படும் முட்டை  பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
கைக்குத்தல் அரிசி - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
முட்டை - 4-6 (வேக வைத்தது)
புதினா - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
 
செய்முறை:
 
முதலில் கைக்குத்தல் அரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
 
பின் அதில் உப்பு சேர்த்து, கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து, 15-17 நிமிடம் வேக வைக்க வேண்டும். சாதம் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
 
பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி, பின் அதில் பாதியை ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு அந்த வாணலியில் உள்ள வெங்காயத்துடன், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் கிளறி விட வேண்டும்.
 
பின் அதில் தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி, பின் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அதில் தயிர், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நின்கு பிரட்டி விட வேண்டும்.
 
மசாலாவானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் முட்டையை கீறிப் போட்டு பிரட்டி விட வேண்டும்.
 
இறுதியில் அதில் வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து, அதன் மேல் வெங்காயம், சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா தூவி, வாணலியை மூடி குறைவான தீயில் 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கி கிளறி பரிமாறினால், கைக்குத்தல் அரிசி முட்டை  பிரியாணி ரெடி!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்