இலங்கையில் மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் வெளியானது!
![இலங்கையில் மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் வெளியானது!](ptmin/uploads/news/SriLanka_renu_bar.jpg)
4 மார்கழி 2024 புதன் 13:11 | பார்வைகள் : 1015
புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
”இக்காலப் பகுதியில் மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.
மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.
சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாவட்ட ரீதியாக பார்க்கும் பொழுது கொழும்பு 24,
கம்பஹா 18,
களுத்துறை 8,
காலி 9,
மாத்தறை 5,
அம்பாந்தோட்டை 5,
யாழ்ப்பாணம் 5,
கிளிநொச்சி 16,
வவுனியா 2,
மன்னார் 2,
திருகோணமலை 4,
மட்டக்களப்பு 1,
அம்பாறை 5,
கண்டி 11,
மாத்தளை 6,
நுவரெலியா 8,
அநுராதபுரம் 4,
பொலனறுவை 3,
புத்தளம் 6,
குருணாகலை 8,
பதுளை 9,
மொணராகலை 7,
இரத்தினபுரி 6 ,
கேகாலை 2 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எந்த விதமான மதுபான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இப் பட்டியலின் பிரகாரமே சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சமீபத்தில் பேசுபொருளாக மாறியிருந்தன. அரசியல் இலஞ்சத்தின் போர்வையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை பொதுமக்களும் அறியக்கூடிய வகையில் அதனை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.