Paristamil Navigation Paristamil advert login

யேல் பல்கலையில் ராதிகா குமாரசுவாமி

யேல் பல்கலையில் ராதிகா குமாரசுவாமி

19 ஆனி 2024 புதன் 09:08 | பார்வைகள் : 1023


அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட யேல்  பல்கலைக்கழகத்தில்  பெண்களுக்கான கல்வி ஆரம்பிக்கப்பட்ட 150 ஆவது ஆண்டு தினம் மற்றும் இருபாலார்  கல்வி ஆரம்பிக்கப்பட்ட  50 ஆவது ஆண்டு தினம்  என்பன தொடர்பான ஒரு வருட கால  ஞாபகார்த்த கொண்டாட்டங்களின் அங்கமாக அந்தப் பல்கலைக்கழகத்தின்  சர்வதேச மாணவர்கள் மற்றும்  அறிஞர்கள் அலுவலகம்  அதன் முன்னாள் மாணவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில்  உலகமெங்குமுள்ள   அனைத்துத் தலைமுறைகளையும் பின்னணிகளையும்  கொண்ட  பெண்களை அவர்கள் மேற்கொண்ட  கவனத்தை ஈர்க்கும் உன்னதமான பங்களிப்புகள்  குறித்து முன்னிலைப்டுத்தும்  நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளது.  

அந்த வகையில் மேற்படி முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் வரிசையில் இலங்கையைச் சேர்ந்த ராதிகா குமாரசுவாமி உள்ளடங்குகிறார்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட  ராதிகா குமாரசாமி மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும்  இராஜதந்திரியாகவும்  பெண்களுக்கான வழக்கறிஞராகவும் உள்ளார்.   

1974ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில்   கலை இளமாணிப் பட்டமொன்றைப்  பெற்ற அவர்  தனது  சட்ட கலாநிதி மற்றும்  சட்ட முதுமாணிப் பட்டங்களை  முறையே  கொலம்பிய மற்றும் ஹவார்ட் பல்கலைக்கழகங்களில் பெற்றுள்ளார்.

 பெண்கள்  உரிமைகளுக்கான வலுவான வழக்கறிஞரொருவராக  விளங்கிய அவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் வேறுபட்ட  அம்சங்கள் தொடர்பிலும் சர்வதேச ஆட்கடத்தல் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்துக்கு அறிக்கையிட்டுள்ளார்.  

அத்துடன்  அவரது அறிக்கைகளில்  பல நாடுகளுக்கான அவரது கள விஜயங்களும் உள்ளடங்கியிருந்தன.  அவரது நிபுணத்துவ அடிப்படையில்  ஐக்கிய நாடுகள் (முன்னாள்)  செயலாளர்  நாயகம் பான் கீ மூன்   பெண்கள் தொடர்பில் ஆயுத  மோதலின் போதான சமமற்ற தனித்துவமான தாக்கம் குறித்துக் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1325 ஆம் இலக்கத்  தீர்மானத்தின் நிறைவேற்றம் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட  உலகளாவிய ஆய்வொன்றுக்கு தலைமை ஆய்வு எழுத்தாளராக  அவரை நியமித்தார்.

 இந்த ஆய்வானது  மேற்படி  தீர்மானம்  தொடர்பில்  உலகளாவிய ரீதியில்  எட்டப்பட்ட முன்னேற்றத்தை மதிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.  ராதிகா குமாரசுவாமி மியன்மாரில் ரோஹிங்யா மக்களுக்கு எதிரான  கொடுமைகள் குறித்து  கண்டறியும்  ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கையில் உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

ராதிகா குமாரசுவாமி  ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது உயர் பதவி நிலையாகவுள்ள  ஐக்கிய நாடுகள் கீழ்நிலை செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக செல்வாக்குமிக்க குறிப்பிடத்தக்க தலைமைத்துவ வகிபாங்கள் பலவற்றை வகித்துள்ளார். அத்துடன் அவர்  தனது  பணிக்கான அங்கீகாரமாக பிரசித்தி பெற்ற தேசிய மற்றும்  சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்