Paristamil Navigation Paristamil advert login

மது அருந்திய பின் உடலில் நடக்கும் மாற்றங்கள் தெரியுமா..?

மது அருந்திய பின்  உடலில்   நடக்கும் மாற்றங்கள் தெரியுமா..?

9 வைகாசி 2024 வியாழன் 14:58 | பார்வைகள் : 567


மதுபானங்களை முடிந்த வரை மிதமான அளவு பருக வேண்டியது அவசியம். மது அருந்துவதால் நமது உடலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் நச்சு நீக்க செயல்முறை குறித்து தெளிவு வைத்துக் கொள்வது அவசியம். நமது உடலுக்குள் மதுபானங்கள் சென்றவுடன் என்ன ஆகும், அது நமது உடலை விட்டு வெளியேறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? இதுபோன்ற அடிப்படை கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நமது உடலுக்குள் மதுபானம் செல்லும் பொழுது என்ன ஆகும்? மதுபானங்களை சாப்பிட்ட பிறகு நமது உடலானது பல்வேறு விதமான வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு ஆளாகிறது. இது நமது உடலில் உள்ள உறுப்புகளை பாதிக்கிறது. மதுபானங்கள் உடனடியாக வயிறு மற்றும் சிறுகுடல் வழியே ரத்த ஓட்டத்தில் நுழைகிறது. அதன் பிறகு அது கல்லீரலை அடைகிறது. இந்த இடத்தில் தான் மதுபானத்தின் வளர்சிதை மாற்றத்தின் பெரும்பகுதி நடைபெறுகிறது.

இதற்கு காரணம் கல்லீரலில் உள்ள ஒரு சில நொதிகள் மதுபானத்தை உடைத்து, அதனை குறைவான சேதம் ஏற்படுத்தக்கூடிய பொருட்களான அசிட்டால்டிஹைடு மற்றும் அதன் பிறகு அதனை அசிட்டேட்டாக மாற்றுகிறது. இது பின்னர் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக வளர்சிதை மாற்றம் பெறுகிறது. இறுதியில் சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேறுகிறது. எனவே மதுபானத்தின் வளர்சிதை மாற்றத்தில் கல்லீரல் மிக முக்கிய பங்காற்றுகிறது.

அதிகப்படியான மதுபானம் நமது உடலை எவ்வாறு பாதிக்கிறது?அதிகப்படியாக மது அருந்துவது பல்வேறு உறுப்புகளில் மோசமான சேதங்களை ஏற்படுத்தலாம்: இது வயிறு மற்றும் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, அதன் புறணிகளை எரிச்சல் அடைய செய்து, அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. இறுதியில் இதனால் அல்சர் மற்றும் கேஸ்டிரீசிஸ் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக பல நாட்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களின் கணைய செயல்பாட்டில் தாக்கம் உண்டாகிறது. இதனால் பான்கிரியாரிட்டிடிஸ் உண்டாகிறது. இது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வலி மிகுந்த மருத்துவ நிலையாகும். மேலும் அதிகப்படியாக மது அருந்துவதால் நமது மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். மதுவானது மயக்க மருந்து போல செயல்பட்டு மூளைக்குள் நடக்கும் நரம்பு கடத்தும் செயல்பாடுகளை மெதுவாக்குகிறது.

மதுபானம் உடலை விட்டு வெளியேற எவ்வளவு நேரம் ஆகும்?மதுபானத்தின் வெளியேற்றம் பற்றி பேசுகையில் மதுபானத்தை சாப்பிட்ட உடனேயே நமது உடலானது அதனை வளர்சிதை மாற்றம் செய்து மதுவை வெளியேற்ற ஆரம்பித்து விடுகிறது. பொதுவாக ஒரு கிளாஸ் மதுபானத்தை வளர்சிதை மாற்றம் செய்ய நமது கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகும். எனினும் இந்த விகிதமானது பாலினம், உடல் எடை, அடிப்படை மெட்டபாலிக் விகிதம், வயது மற்றும் எடுத்துக்கொண்ட மதுபானத்தின் அளவு போன்றவை பொருத்து மாறுபடலாம்.

மதுபானத்தை அருந்திய 12 மணி நேரம் வரை சராசரி சிறுநீர் சோதனை மூலமாக அதனை கண்டுபிடிக்கலாம். எனினும் மேம்படுத்தப்பட்ட சோதனைகள் மூலமாக மதுபானங்கள் அருந்திய 24 மணி நேரங்கள் கழித்து கூட அதனை கண்டுபிடிப்பதற்கான வசதி தற்போது உள்ளது. மூச்சு சோதனைகள் மூலமாக மதுபானங்கள் சாப்பிட்ட 4 முதல் 6 மணி நேரங்களில் அதனை கண்டுபிடிக்கலாம்.

நமது உடலில் நடக்கும் மதுபான வெளியேற்ற செயல்முறை பல்வேறு நிலைகளில் நடைபெறுகிறது. ஆரம்ப நிலையில் ரத்த ஓட்டத்திலிருந்து மதுபானம் அகற்றப்படுகிறது. மதுபான வளர்சிதை மாற்றம் தொடர்ச்சியாக நடைபெறும் பொழுது இந்த செயல்முறை நிறைவடைந்து, அறிகுறிகளில் இருந்து மீண்டு வர ஒரு நாள் அல்லது ஒரு சில வாரங்கள் கூட அவலம்.

இந்த நச்சு நீக்க செயல்முறையின்பொழுது வழக்கமான உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது, பழங்கள், காய்கறிகள் மற்றும் குடலை ஆதரிக்கும் ப்ரோ பயோடிக் அடங்கிய சரிவிகித உணவை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஒருவர் பின்பற்ற வேண்டும். பெர்ரி பழங்கள், சாத்துக்குடி, கேல், பரங்கிக்காய், தர்பூசணி பழம், ப்ராக்கோலி, வெள்ளரிக்காய், கீரை மற்றும் நெருஞ்சில், சீமைக் காட்டு முள்ளங்கி போன்ற மூலிகைகளை சேர்ப்பது கல்லீரலை ஆரோக்கியத்தை மேம்படுத்தி நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை உயர்த்தும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்