Paristamil Navigation Paristamil advert login

தக்காளி சாதம்

தக்காளி சாதம்

15 சித்திரை 2024 திங்கள் 15:24 | பார்வைகள் : 363


குழந்தைகளுக்கு பிடித்தவாறு அதிகமான எந்த பொருட்களும் இல்லாமல் பிரியாணி சுவையில் 10 நிமிடத்தில் ருசியான தக்காளி சாதம் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.இந்த தக்காளி சாதத்திற்கு வெங்காய பச்சடி, உருளைக்கிழங்கு வறுவல், கூட்டு, உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.


தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்

பெரிய தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 1

புதினா - கைப்பிடி

கொத்தமல்லி இலை - கைப்பிடி

உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை :

முதலில் அரிசியை இரண்டு, மூன்று முறை நன்றாக அலசி எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் பிரஷர் குக்கர் ஒன்றை வைத்து தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.

எண்ணெய் மற்றும் நெய் நன்கு சூடானதும் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

பின்னர் அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நீளவாக்கில் நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் முழு பச்சை மிளகாய்களை சேர்த்துக் வதக்கி கொள்ளுங்கள்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனவுடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் வதக்கி கொள்ளுங்கள்.

அனைத்தும் மென்மையாக வதங்கியவுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கலந்து விட்டு இரண்டு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் உங்கள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

அதன் பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை விட்டு விடுங்கள்.

குக்கரில் பிரஷர் தானாக அடங்கியதும் மூடியை திறந்து பார்த்தால் பிரயாணி சுவையில் தக்காளி சாதம் சூடாக சாப்பிட தயாராக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்