Paristamil Navigation Paristamil advert login

கத்திரிக்காய் சட்னி

கத்திரிக்காய் சட்னி

17 பங்குனி 2024 ஞாயிறு 14:22 | பார்வைகள் : 689


நெருப்பில் சுட்ட கத்திரிக்காயில் செய்யப்படும் சட்னியை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி ஏன் சாப்பாட்டிற்கு கூட சேர்த்து சாப்பிடலாம். அதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். சுட்ட கத்திரிக்காய் சட்னியை வீட்டிலேயே எப்படி எளிய செய்முறையில் செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….

தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய் - 1 பெரியது

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2 சிறியது

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை :

முதலில் கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி அதை நெருப்பில் 8 நிமிடங்களுக்கு சுடவும்.

கத்தரிக்காயின் தோல் நன்றாக கருப்பாக மாறி வெடித்ததும் ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்துவிடுங்கள்.

பின்னர் அதே போல் தக்காளியையும் நெருப்பில் மூன்று நிமிடங்களுக்கு சுட்டு அதையும் தண்ணீரில் போட்டு கொள்ளவும்.

இரண்டும் நன்றாக ஆறியவுடன் அவற்றின் கருகிய தோல்களை எல்லாம் எடுத்துவிடுங்கள்.

பின்னர் அவற்றை மற்றொரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கைகளால் மசித்து கொள்ளவும்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் போட்டு கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

பின்னர் அதில் நறுக்கிய பூண்டு பல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

பிறகு அவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

தற்போது நாம் மசித்து வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.

கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான நெருப்பில் சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெடி…

வர்த்தக‌ விளம்பரங்கள்