Paristamil Navigation Paristamil advert login

காலிஃபிளவர் பட்டாணி குருமா

காலிஃபிளவர் பட்டாணி குருமா

15 பங்குனி 2024 வெள்ளி 13:08 | பார்வைகள் : 696


சப்பாத்தி என்றால் நம் நினைவிற்கு வருவது என்னவோ சுவையான குருமா தான். அதுவும் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தது என்னவோ ‘காலிஃபிளவர் பட்டாணி குருமா’ தான். இந்த குருமாவை சப்பாத்தி மட்டுமல்லாமல் இட்லி, தோசை, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசி அள்ளும்.

தேவையான பொருட்கள் :

காலிஃபிளவர் - 1

பச்சை பட்டாணி - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

துருவிய தேங்காய் - 1/4 கப்

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மஞ்சள்த் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - கரத்திற்க்கேற்ப

கொத்தமல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

கிராம்பு -2

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - 2

முந்திரி - 7

பட்டை - சிறிய துண்டு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு போட்டுக்கொள்ளுங்கள்.
இவை பொரிந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டை விழுதுதை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி மென்மையாக வெந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு அலசிய காலிஃபிளவர், பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பு கிளறவும்.

பின்னர் அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து ஒரு மூடி போட்டு காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும்.

இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு, சீரகம், மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றி நன்கு கிளறி 5 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக விடவும்.

கடைசியாக குருமாவை இறக்குவதற்கு முன் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான காலிஃபிளவர் பட்டாணி குருமா ரெடி…

வர்த்தக‌ விளம்பரங்கள்