Paristamil Navigation Paristamil advert login

அறிவுக்கான தீ பரவட்டும்! புத்தகக் காட்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

அறிவுக்கான தீ பரவட்டும்! புத்தகக் காட்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

9 தை 2026 வெள்ளி 12:09 | பார்வைகள் : 157


அறிவுப்புரட்சிக்கான கருவிகள் புத்தகங்கள்; அவை விலைமதிப்பற்ற சொத்து என முதல்வர் ஸ்டாலின் புத்தகக் காட்சி தொடக்க விழாவில் பேசினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் 49வது சென்னை புத்தகக் காட்சி இன்று(ஜன.8) தொடங்கி ஜன. 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக சென்னை நந்தனம் திடலில் மிகப் பெரிய அளவில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “1977 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த அறிவுப் பணி. இதுப்போது 49 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அன்று 13 அரங்குகளுடன் தொடங்கிய இந்த புத்தகக் காட்சி, இன்று 900 அரங்குகளுடன் இருப்பதே வெற்றிக்கான சான்றாக அமைந்திருக்கிறது.

இன்னும் அதிகளவிலான மக்கள் புத்தகக் காட்சிக்கு வரவேண்டும். அதற்காகத் தான் நுழைவுக்கட்டணம்கூட இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி புத்தகக் காட்சிக்காக வழங்கிய ரூ. 1 கோடி நிதியில் இருந்து வரக்கூடிய வட்டித் தொகையில் இருந்து 6 எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம். தற்போது வரை ரூ. 11 லட்சம் வழங்கியிருக்கிறோம்.

கவிஞர் சுகுமாரனுக்கு கவிதைக்கும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு படைப்புகளை படைக்கக்கூடிய ஆதவன் தீட்சணிக்கு சிறுகதைக்கும், பன்முக எழுத்தின் முகமான இரா. முருகனுக்கு நாவலுக்கும், ஓவியங்கள், சிற்பங்கள், கட்டட கலைகள் குறித்த ஆய்வுகளுக்காக பேராசிரியர் பாரதி புத்திரனுக்கும், கருணா பிரசாத்துக்கு நாடகத்துக்கும், தமிழ்நாட்டின் மிக முக்கியமான கவிஞரும், பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்ற புத்தகத்தைக் கொடுத்த வை. கீதாவுக்கு மொழிப் பெயர்ப்புக்கான விருதை வழங்கியதற்காக மிகவும் பெருமையடைகிறேன்

அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; அவ்வகையில் புத்தகக்காட்சி செயல்படுவது பாராட்டுக்குரியது. புத்தகக்காட்சி அரங்குகளை பார்வையிட கட்டணம் வசூலிக்காதது வரவேற்கத்தக்கது.

விலைமதிப்பற்ற சொத்து புத்தகங்கள்தான். வாசிப்பை ஊக்குவிக்க ஏராளமான திட்டங்களை செய்கிறோம். தமிழகம் முழுவதும் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நூலகம் அமைத்துள்ளோம். புத்தகங்களைப் படித்து அறிவைப் பெருக்க திருச்சி, கடலூர் உள்ளிட்ட ஊர்களில் அறிவுலகம் அமைத்துள்ளோம்.

கடந்த 2017 முதல் என்னை சந்தித்தவர்கள் வழங்கிய சுமார் 4 லட்சம் புத்தகங்களை நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பியுள்ளேன். புத்தகங்கள் பரிமாறுவதை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறோம்.

என வாரிசுகள் என்னுடைய புத்தகங்கள்தான் எனச் சொன்னவர் பெரியார். வீட்டுக்கு ஒரு நூலகம் அமையுங்கள் என பேரறிஞர் அண்ணா சொன்னார். புத்தகங்கள் மூலம் உலகைப் படியுங்கள் என கலைஞர் கருணாநிதி கட்டளையிட்டார். அறிவுக்கான தீ பரவட்டும் என அவர் கூறிய பாதையில்தான் நமது அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தகக் காட்சிக்கு அனுமதி வழங்கியிருக்கிறோம். புத்தகக் காட்சியை நடத்த ஆண்டுதோறும் ரூ. 75 லட்சம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்