Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்: டிச. 31ல் அ.தி.மு.க., - மா.செ.,க்கள் கூட்டம்

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்: டிச. 31ல் அ.தி.மு.க., - மா.செ.,க்கள் கூட்டம்

29 மார்கழி 2025 திங்கள் 05:00 | பார்வைகள் : 166


அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், டிச. 31ம் தேதி நடக்கும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், டிச. 31ம் தேதி காலை மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது. மாவட்டச் செயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என கூறப் பட்டுள்ளது.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பின், பட்டியலில் இருந்து 97 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க ஜன., 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆலோசிக்கவே மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு தொகுதியிலும், 30,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்த்திருந்தனர்.

எஸ்.ஐ.ஆரில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியிலேயே ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். வரும் ஜன., 18 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் அளித்துள்ளதால், மீண்டும் பல்லாயிரக்கணக்கானோரை சேர்க்க ஆளும் தி.மு.க., திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

அதை முறியடித்து, அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர்கள் விடுபடாமல் சேர்ப்பது குறித்து மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். மேலும், கூட்டணியில் அ.ம.மு.க., மற்றும் பன்னீர்செல்வம் அணியை சேர்ப்பது, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்