Paristamil Navigation Paristamil advert login

அமளிக்கு இடையிலும் முழு செயல்திறனை எட்டிய லோக்சபா, ராஜ்யசபா

அமளிக்கு இடையிலும் முழு செயல்திறனை எட்டிய லோக்சபா, ராஜ்யசபா

20 மார்கழி 2025 சனி 08:42 | பார்வைகள் : 394


பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், ராஜ்யசபா, 121 சதவீதம்; லோக்சபா 111 சதவீத செயல்திறனுடன் இயங்கி உள்ளன.

குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 1ல் துவங்கிய நிலையில் நேற்று நிறைவடைந்தது. வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்டவை தொடர்பாக, லோக்சபா, ராஜ்யசபாவில் ஆளும் கூட்டணி - எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன.

அதே சமயம், 20 ஆண்டுகள் பழமையான மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்துக்கு பதில் கொண்டு வரப்பட்டுள்ள, 'விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி' என்ற புதிய மசோதாவிலும் காரசார விவாதம் நடந்தது.

இந்த கூட்டத்தொடரில், இரு சபைகளிலும் எட்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், ராஜ்யசபாவில், சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “என் தலைமையில் நடந்த முதல் கூட்டத்தொடர் என்ப தால், இது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.

இந்த கூட்டத்தொடரில், ராஜ்யசபா மொத்தம் 92 மணி நேரம் இயங்கி, 121 சதவீத செயல்திறனை எட்டியுள்ளது.

''தினசரி சராசரியாக, 84 பூஜ்ய நேர அறிவிப்புகள் பெறப்பட்டன. இது முந்தைய கூட்டத்தொடர்களை விட 31 சதவீதம் அதிகம்,” என்றார்.

லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “மொத்தம் 15 அமர்வுகள் நடந்த இந்த கூட்டத்தொடரில், லோக்சபாவின் ஒட்டுமொத்த செயல்திறன், 111 சதவீதமாக இருந்தது. மக்களின் முக்கிய பிரச்னைகளில் எம்.பி.,க்கள் காட்டிய ஆர்வம் பாராட்டுக்குரியது,” என்றார்.

ஏற்க முடியாதது!

டில்லி காற்று மாசு பிரச்னை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருந்தது. சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரும் பதிலளிக்க தயாராக இருந்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் காற்று மாசு குறித்து விவாதிக்க முடியவில்லை. புதிய வேலைவாய்ப்பு உறுதி திட்ட மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் ஏற்க முடியாதது.

கிரண் ரிஜிஜு

பார்லி., விவகார அமைச்சர், பா.ஜ.,

வர்த்தக‌ விளம்பரங்கள்