Paristamil Navigation Paristamil advert login

தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

8 கார்த்திகை 2025 சனி 06:39 | பார்வைகள் : 139


வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இன்ஜின்களை வாங்குவதற்கான ஒப்பந்த்தில் இந்தியா கையெழுத்திட்டது.

ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலுக்கு பின், ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், உள்நாட்டில் போர் விமானங்களை தயாரித்து வரும் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்திடம் இருந்து, 97 தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அந்நிறுவனத்துடன், 62,370 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில், நம் ராணுவ அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, 2027 - 28ம் நிதியாண்டு முதல் நம் ராணுவத்துக்கு போர் விமானங்கள் வழங்கும் பணியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் துவங்கும். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள், 97 போர் விமானங்களை நம் விமானப்படைக்கு அந்நிறுவனம் தயாரித்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகை போர் விமானங்களில், 64 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்கும். இதனால், 105 உள்நாட்டு நிறுவனங்களுக்கு நேரடி பணி வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது, பல மாதங்களாக வரி விதிப்பு காரணமாக ஏற்பட்ட பதட்டங்களுக்கு பிறகு அமெரிக்காவுடனான உறவுகள் மேலும் வலுவடைந்து வருகிறது.

இந்தசூழலில், தேஜஸ் போர் விமானங்களுக்கான இன்ஜினை உலக அளவில் போர் விமான என்ஜின் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் GE AERO SPACE நிறுவனத்திடமிருந்து வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், விநியோகங்கள் 2027ல் தொடங்கி 2032க்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதிதாக தயாரிக்கப்படும் 97 தேஜஸ் போர் விமானங்கள், நீண்ட காலமாக சேவை செய்த மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்