Paristamil Navigation Paristamil advert login

மஹிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு

மஹிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு

23 புரட்டாசி 2025 செவ்வாய் 10:16 | பார்வைகள் : 156


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்களின் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமினி கமன் துஷார நேற்று இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்த விஜேராம மாவத்தையில் உள்ள வீட்டைப் புதுப்பிக்க 5.1 பில்லியன் ரூபாய் அரசு நிதி செலவிடப்பட்டது முறையான கொள்முதல் செயல்முறையின்படி மேற்கொள்ளப்பட்டதா?

அல்லது அது ஊழல் ரீதியாக செலவிடப்பட்டு இலங்கைக் குடியரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதா? என்பது குறித்து முறையான விசாரணை நடத்துமாறு லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் மகனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்து வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானதா, அல்லது முறைகேடாகப் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் புகாரில் கோரப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச (மேரி லூடிஸ் விக்ரமசிங்க) சுமார் 400 மில்லியன் மதிப்புள்ள வீட்டை (கொழும்பு மியூசியஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள டொரிங்டன் மாவத்தையில்) சொந்தமாக வைத்திருக்கிறார்.

அந்த வீடு சிரிலிய கணக்கில் 35 மில்லியன் ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்பதும் நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 5, டொரிங்டன் மாவத்தை, எண் 260/12ஐ கொண்ட வீட்டை ஷிரந்தி ராஜபக்ச 05.04.2013ஆம் திகதியன்று 400 இலட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

அவருக்கு 350 இலட்சம் எவ்வாறு வந்தது என புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாடு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்