உணவு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் hexane வேதிப்பொருள்! - தடை செய்ய வலுக்கும் கோரிக்கை!!

23 புரட்டாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 567
உணவு தயாரிக்கும் துறையில் hexane எனும் வேதிப்பொருள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும் எனும் கோரிக்கையை Greenpeace தொண்டு நிறுவனம் முன்வைத்துள்ளது.
பிரான்சில் மட்டுமில்லாது, ஐரோப்பாவுக்கே இதனை தடை விதிக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். hexane என்பது (C₆H₁₄) பெற்றோலிய எண்ணையில் இருந்து வடிகட்டி எடுக்கும் ஒரு வேதிப்பொருளாகும். அவற்றை பயன்படுத்தியே தாவர எண்ணைகளை பிரித்தெடுக்கும் வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தாவர எண்ணைகளை உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் போது அது நரம்பு தொடர்பான உபாதைகளை ஏற்படுத்துகிறது என Greenpeace அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
”மறு நச்சுத்தன்மை கொண்டதாகவும், நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் ஒரு காரணியாகவும் சந்தேகிக்கப்படுகிறது” என அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கிலோ தாவர எண்ணையில் 0.05 தொடக்கம் 0.08 மில்லி கிராம் வரை இந்த hexane கலந்திருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், 1996 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பாவில் இது பயன்பாட்டில் இருப்பதாகவும், உணவு பழக்கவழக்களினால் நீண்டகால நோய்களை எதிர்கொள்ள நேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.