மோடியின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து உன்னி முகுந்தன்!

22 புரட்டாசி 2025 திங்கள் 17:39 | பார்வைகள் : 168
மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகர் உன்னி முகுந்தன். இவர், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப் போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன்படி மா வந்தே என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க கிராந்தி குமார் இயக்குகிறார். ரவி பஸ்ரூர் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், செந்தில்குமார் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம் குஜராத்தி, மராத்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் உன்னி முகுந்தன் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “மரியாதைக்குரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களாக ‘மா வந்தே’ திரைப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.இது
அகமதாபாத்தில் நான் சிறுவனாக வளர்ந்த போது அவரை முதலமைச்சராக எனக்கு தெரியும். அதன் பிறகு 2023 ஏப்ரலில் அவரை நேரில் சந்தித்தது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. இது எனக்கு இன்னொரு கேரக்டர் இல்லை. மிகப்பெரிய பொறுப்பு. எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக எல்லாத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்த படத்திற்கு நிச்சயம் நியாயம் சேர்ப்பேன் என நம்புகிறேன். இது அரசியல் படம் கிடையாது. அன்பான தாய் – மகனைப் பற்றிய படம்” என்று தெரிவித்துள்ளார்.
மோடிக்கும், அவருடைய தாய் ஹீராபென் மோடிக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்திற்கு ‘மா வந்தே’ (தாயே உன்னை வணங்குகிறேன்) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.