நாட்டின் வலிமையை எதிரிக்கு காட்டிவிட்டோம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

20 புரட்டாசி 2025 சனி 12:01 | பார்வைகள் : 139
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நமது நாட்டின் வலிமையை பதிலடி மூலம் எதிரிக்கு காட்டியது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த பாதுகாப்பு துறை தொடர்பான நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
26 பேரைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா மே 7ம் தேதி ஆப்பரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நமது நாட்டின் வலிமையை பதிலடி மூலம் எதிரிக்கு காட்டியது. இந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதில் தீவிரமாக பாதுகாப்பு படை பணியாற்றி தனது தைரியத்தை நிரூபித்துள்ளது. வெற்றி நமக்கு பழக்கமாகிவிட்டது. இதனை நாம் தொடர்ந்து எப்போதும் செய்ய வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க அரசாங்கம் உறுதியாக இருந்தது. அந்த சம்பவம் நம் நினைவுக்கு வரும்போதெல்லாம். நம் இதயம் கனமாகிறது. அந்த சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியது.
இந்த முறை பயங்கரவாதிகளுக்கு அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு பாடம் கற்பிக்கப்படும் என்று நமது பிரதமர் உறுதியாக இருந்தார்.
இந்த தாக்குதல்கள் நான்கு நாட்கள் தீவிர மோதல்களைத் தூண்டின. இந்தியர்களாகிய நம் சிறப்பு என்னவென்றால், சவால்களை கண்டு நாம் எப்போதும் பின்வாங்கியது இல்லை. நாங்கள் கடினமாக உழைத்து பதிலடி கொடுத்தோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.