Paristamil Navigation Paristamil advert login

காசா அமைதி ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

காசா அமைதி ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

10 ஐப்பசி 2025 வெள்ளி 05:16 | பார்வைகள் : 138


காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அப்போது வர்த்தக ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்தார். இதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ஹமாஸ் அமைப்பும் அதனை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்தில் நடந்து வருகிறது.

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன . இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல், தனது வீரர்களை காசாவில் இருந்து திரும்பப் பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இந்த ஒப்பந்தத்துக்காக நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: எனது நண்பர் டிரம்ப்புடன் பேசினேன். வரலாற்று சிறப்பு மிக்க காசா அமைதி திட்டத்துக்கு அவருக்கு பாராட்டு தெரிவித்தேன். வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தோம். வரும் காலங்களில் தொடர்பில் இருக்க முடிவு செய்தோம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நெதன்யாகுவுடன் பேச்சு


இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: எனது நண்பர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பேசினேன். டிரம்ப் தலைமையில், ஏற்பட்டுள்ள காசா அமைதி ஒப்பந்தத்துக்காக நெதன்யாகுவை பாராட்டினேன். பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசா மக்களுக்கு மனித நேய உதவிகளை செய்வதையும் இந்தியா வரவேற்கிறது. உலகில் பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்