Paristamil Navigation Paristamil advert login

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ அழைப்பில் விஜய் ஆறுதல்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ அழைப்பில் விஜய் ஆறுதல்

8 ஐப்பசி 2025 புதன் 10:13 | பார்வைகள் : 1496


கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் 'வீடியோ' அழைப்பில் தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது அவர்களிடம், நான் உங்களுடன் இருக்கிறேன் என விஜய் உருக்கமாக பேசி இருக்கிறார்.

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சென்ற மாதம் 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அரசு சார்பில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வாரம் கழித்து மவுனம் கலைத்த விஜய் வீடியோவில் பேசி இரங்கல் தெரிவித்தார்.

இந்த சூழலில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ அழைப்பில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். கூட்ட நெரிசலில் பலியான தனுஷ் குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி உள்ளார். நடக்கக்கூடாதது நடந்து விட்டது, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என பேசிய விஜய், இறந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினர் இடம், நான் உங்களுடன் இருக்கிறேன் என விஜய் உருக்கமாக பேசி இருக்கிறார். 15 முதல் 20 நிமிடம் வரை விஜய் பேசி ஆறுதல் கூறியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வீடியோ அழைப்பில் பேசியபோது போட்டோ மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் விஜய் நிவாரணம் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்