Paristamil Navigation Paristamil advert login

கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன்

கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன்

2 ஐப்பசி 2025 வியாழன் 04:11 | பார்வைகள் : 5609


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளார்.

கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகிய இருவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விஜயின் பிரசார வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் டிரோன் காட்சிகளை ஒப்படைக்கக் கோரி, தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளனர். வீடியோ காட்சிகளை அக்.,3ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சம்மன் அளித்துள்ளனர்.

அக்.,3ல் விசாரணை

தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாலைகளில் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிரேசன் தாக்கல் செய்த மனு அக்.,3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.