ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி ; 27 பேர் காயம்!

28 ஆவணி 2025 வியாழன் 19:19 | பார்வைகள் : 171
ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து புதன்கிழமை (27) அதிகாலை பயணித்த இந்த பஸ் காபூலின் அர்கண்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
பஸ்ஸில் பயணித்தவர்கள் ஹெல்மண்ட், கந்தஹார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பஸ் சாரதி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சின் ஊடக பேச்சாளர் அப்துல் மதீன் கானி தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற சிறிது நேரத்தில் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் கொடூரமான பேருந்து விபத்தொன்றில் சிக்கி 80 பேர் பலியான நிலையில், ஒரு வாரம் கழித்து, அந்நாட்டில் மீண்டுமொரு பஸ் பதன்கிழமை விபத்துக்குள்ளாகியிருக்கிறது.