அறிமுக இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்…

28 ஆவணி 2025 வியாழன் 13:14 | பார்வைகள் : 452
கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் இந்த படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை. திரையரங்கில் மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இது விக்ரம் போன்ற ஒரு மாஸ் நடிகருக்கு சராசரிக்குக் கீழான வசூல்தான். அதற்குக் காரணம் விக்ரம்தான் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். ஏனென்றால் அவரை நம்பி தியேட்டர் வந்த ரசிகர்களைப் பல ஆண்டுகளாக அவர் வைத்து செய்துள்ளார். அதன் காரணமாக ரசிகர்கள் அவர் படத்துக்கு செல்வதையே விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து விக்ரம் ஒரு அறிமுக இயக்குனரின் கதையில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வீர தீர சூரன் படத்துக்குப் பிறகு மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார் விக்ரம். ஆனால் இரண்டு பேர் சொன்ன கதையும் அவருக்குத் திருப்தி அளிக்காததால் அந்த படங்கள் அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை என தெரிகிறது. இந்நிலையில் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க விக்ரம் சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த இயக்குனர் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.