ஜன நாயகன் அரசியல் பேசப் போகிறதா ?

22 ஆனி 2025 ஞாயிறு 14:23 | பார்வைகள் : 298
தனது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடி வரும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு, அவரது நடிப்பில் உருவாகி வரும் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியான இந்த மிரட்டலான வீடியோ, "என் நெஞ்சில் குடியிருக்கும்" என்ற விஜய்யின் கம்பீரமான குரலுடன் தொடங்குகிறது. ஒரு போராட்ட களத்தில், கையில் வாளுடன் போலீஸ் உடையில் விஜய் நடந்து வரும் காட்சி, அத்துடன் அவரது முறுக்கு மீசை கெட்டப் ஆகியன ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமைந்துள்ளன.
இந்தக் காணொளியின் தொடக்கத்தில், "உண்மையான தலைவர் மக்களுக்காக மட்டுமே எழுகிறார், அதிகாரத்திற்காக அல்ல"என்ற ஆங்கில வாசகம் இடம் பெற்றுள்ளது. சுற்றிலும் நெருப்பு எரிந்து கொண்டிருக்க, விஜய் அதற்கிடையே மாஸாக நடந்து வரும் காட்சியும் வீடியோவில் உள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை காணும்போது, விஜய் இந்தப் படத்தில் ஒரு ஆக்ரோஷமான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. விஜய் நிஜ வாழ்க்கையில் பேசும் வசனமும், வீடியோவில் இடம் பெற்றுள்ள வாசகங்களும் இது அரசியல் பேச உள்ள படம் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில், மமிதா பாஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை எச். வினோத் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.