முத்தமிட்டதால் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை - இறுதியாக வந்த தீர்ப்பு

9 ஆடி 2025 புதன் 16:00 | பார்வைகள் : 120
வாள் வீராங்கனை காதலரை முத்தமிட்டதால், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
பிரான்ஸை சேர்ந்த 33 வயது வாள்வீச்சு வீராங்கனையான யசோரா திபஸ்(ysaora thibus), 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில், தடைசெய்யப்பட்ட தசையை வளர்க்கும் ‘ஆஸ்டரின்’ என்பதை, யசோரா திபஸ் உட்கொண்டதாக உறுதி செய்யப்பட்டது.
தான் ஆஸ்டரின் பயன்படுத்தவில்லை என்றும், தனது காதலரான அமெரிக்க வாள்வீச்சு வீரர் ரேஸ் இம்போடன்( Race Imboden) ஆஸ்டரின் பயன்படுத்தியுள்ளார். அவரை முத்தமிட்டதால் உமிழ்நீர் வழியாக என் உடலில் ஆஸ்டரின் புகுந்துள்ளது என விளக்கமளித்தார்.
அவரது விளக்கத்தை ஏற்ற சர்வதேச வாள்வீச்சு கூட்டமைப்பு, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது. அதில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில், 5வது இடத்தை பிடித்தார்.
இதனை எதிர்த்து, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில்(CAS) முறையிட்ட உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை(WADA), யசோரா திபஸுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என வாதாடியது.
வழக்கை விசாரித்த சர்வதேச விளையாட்டு நீதிமன்றம், "தனது காதலர் ஆஸ்டரின் பயன்படுத்தியது தெரியாமல் அவரை முத்தமிட்டுள்ளார். முத்தமிடும் போது உமிழ்நீர் வழியாக ஊக்கமருந்து பரவும். அவர் தெரிந்தே ஊக்க மருந்து எடுக்கவில்லை" என கூறி இந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்துள்ளது.
இதே போல், பிரான்ஸ் டென்னிஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கெட், இரவு விடுதியில் ஒருவரை முத்தமிட்ட பிறகு கோகோயின் சோதனையில் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டார்.