581 துணை ராணுவ கம்பெனி, ஜாமர்கள், ட்ரோன்கள்: அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு

6 ஆனி 2025 வெள்ளி 07:31 | பார்வைகள் : 256
38 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளதை தொடர்ந்து 581 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர், ஜாமர்கள் மற்றும் ட்ரோன்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், கடல் மட்டத்தில் இருந்து 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை,- ஆகஸ்ட் மாதங்களில் இங்கு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது மட்டுமே இந்த குகை கோவில் திறந்திருக்கும். இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி துவங்கி ஆக., 9 வரை 38 நாட்கள் மட்டுமே அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு 52 நாட்கள் யாத்திரை நடந்த நிலையில், இந்தாண்டு 38 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 22 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் காஷ்மீர் சென்று இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்தாண்டு பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதப்படையின் 581 கம்பெனி வீரர்கள், ஜாமர்கள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு யாத்ரீகர்கள் பாதுகாப்பாக செல்ல ஏதுவாக அவர்கள் செல்லும் பாதையை நோக்கி வரும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்படும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்வார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற கே 9 பிரிவினரும் மற்றும் வான்வெளியில் கண்காணிப்பில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. பஹல்காம் மற்றும் அமர்நாத் குகை சொல்லும் வழியில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
முதல்முறையாக யாத்ரீகர்கள் செல்லும் வாகனம் வழியில் ஜாமர்கள் பொருத்தப்படும். இந்த வாகனத்தை மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.