பிரித்தானிய இணையதளங்கள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

8 வைகாசி 2025 வியாழன் 20:23 | பார்வைகள் : 142
பிரித்தானியாவின் பல்வேறு இணையதளங்களை குறிவைத்தது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள பல உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசு சார்பு அமைப்புகளின் இணையதளங்கள் மீது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் நடத்திய மூன்று நாட்கள் நீண்ட சைபர் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘NoName057(16)’ எனும் ஹேக்கர் குழு, இந்த இணையதளங்களை முற்றிலும் முடக்க முடியாவிட்டாலும், சில நேரங்களில் அவற்றை அணுக முடியாத நிலைக்கு கொண்டு சென்றதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது.
இந்த ஹேக்கிங் நடவடிக்கை “Distributed Denial-of-Service (DDoS)” எனப்படும் முறையில் நடைபெற்றுள்ளது.
இதன் மூலம், குறிவைத்த இணையதளங்கள் மீது மிகுந்த இணைய போக்குவரத்தை அனுப்பி தற்காலிகமாக அவற்றை முடக்குவதே நோக்கம்.
“பிரித்தானியா உக்ரைன் போரில் தீவிரமாக ஈடுபடுகிறது, எனவே அதன் வளங்களை துண்டிக்கிறோம்” எனக் அக்குழு X தளத்தில் தெரிவித்துள்ளது.
ஆனால், பிளாக்பர்ன், எக்ஸெட்டர் ஆகிய நகர மன்றங்கள் தங்கள் இணையதளங்கள் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளன. ஆருன் மாவட்ட மன்றம், செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு தங்கள் இணையதளத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன என்றும், காலை 11.30 மணிக்குள் மீண்டும் இயங்கத் தொடங்கியது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் பயனர் தரவுகள் பாதிக்கப்படவில்லை என்றும், தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த அளவிலான தொழில்நுட்ப அறிவுடன் மேற்கொள்ளப்படும் DDoS தாக்குதல்கள் சிறிது நேர சிக்கலை மட்டும் உருவாக்கும் எனவும் NCSC தெரிவித்தது.