அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பா? நடவடிக்கை பாயும் என்கிறார் மந்திரி

11 சித்திரை 2025 வெள்ளி 05:53 | பார்வைகள் : 370
அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திறப்பு விழாவுக்காக காத்திருக்காமல், மருத்துவக் கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி, கன்னியாகுமரியில் 7.35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 15 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல, தென்காசியில் 9.02 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 16 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருந்தது.
தென்காசியில் பங்குனி உத்திரம் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. இதனால், அம்மாவட்டத்தில் நடக்க இருந்த புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி, வேறு ஒரு நாள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசியில் நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு, பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.