கடலில் காணாமல் போன சிறுவன்.. இரண்டாவது நாளாக தேடுதல் பணி!!
.jpeg)
21 சித்திரை 2025 திங்கள் 06:55 | பார்வைகள் : 867
13 வயதுடைய சிறுவன் ஒருவன் Palavas-les-Flots கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போயிருந்தான். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முழுவதும் அவனது சடலத்தை தேடும் பணி இடம்பெற்று வந்த நிலையில், இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 20, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு பிரான்சின் Palavas-les-Flots (Hérault) நகர கடலில் சிறுவன் ஒருவன் அவனது குடும்பத்தினருடன் நீந்திக்கொண்டிருந்த வேளையில், சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளான். மாலை 4.25 மணிக்கு அவசரப்பிரிவுக்கு எச்சரிக்கப்பட்டது.
படகுகளில் பல்வேறு மீட்புப்பணிகள் கடலை வட்டமடித்தனர். தீவிர தேடுதல் பணிகள் இடம்பெற்ற போதும் சிறுவனைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்நிலையில், ஏப்ரல் 21, இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேடுதல் பணிகளுக்காக ”Dragon 34” எனும் உலங்குவானூர்தியும் பயன்படுத்தப்பட்டது. நேற்று இரவு 8.40 மணி வரை தேடுதல் பணிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.