Paristamil Navigation Paristamil advert login

ஆல்ப்ஸ் மலைகளில் சக்திவாய்ந்த வசந்த புயல்

ஆல்ப்ஸ் மலைகளில் சக்திவாய்ந்த வசந்த புயல்

19 சித்திரை 2025 சனி 03:29 | பார்வைகள் : 662


சக்திவாய்ந்த வசந்த கால புயல் ஆல்ப்ஸ் மலைத்தொடர் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வசந்த கால புயல் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வட இத்தாலியில் பெய்த பலத்த மழை மற்றும் மலைகளின் உயரமான பகுதிகளில் பதிவான ஒரு மீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு இப்பகுதியை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.

இந்த எதிர்பாராத மற்றும் தீவிரமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் இத்தாலியில் குறைந்தது மூன்று உயிர்களைப் பறித்துள்ளது.

மேலும், இது போக்குவரத்து இணைப்புகளை கடுமையாக பாதித்துள்ளதுடன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல சமூகங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், வெனிஸ் பிராந்தியத்தில் உள்ள விசென்சா அருகே 64 வயதுடைய ஒரு தந்தை மற்றும் அவரது 33 வயது மகன் ஆகியோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமான மழைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளுக்கு உதவி செய்வதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் அவர்களின் வாகனம் அடித்துச் செல்லப்பட்டது.

இப்பகுதி தலைவர் லூகா சாயா இந்த துயரச் சம்பவத்தை "நினைத்துப் பார்க்க முடியாத சோகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, வடக்கு பியட்மாண்ட் பிராந்தியத்தில் 92 வயது முதியவர் ஒருவர் வெள்ளம் சூழ்ந்த தனது வீட்டில் இறந்து கிடந்ததாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

பொதுவாக ஏப்ரல் மாதத்தில் ஆல்ப்ஸ் மலையில் பனிப்பொழிவு ஏற்படுவது அசாதாரணமானது அல்ல என்றாலும், குறுகிய காலத்தில் குவிந்த இந்த அதிகப்படியான பனியின் அளவு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்