மக்கள் பலத்தை விட பெரிய பலம் எதுவும் இல்லை; பிரசாந்த் கிஷோர்

7 தை 2025 செவ்வாய் 04:02 | பார்வைகள் : 3694
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு விடுதலை ஆனார். அவர், 'நீதிமன்றம் எனக்கு ஜாமின் வழங்கியது. மக்கள் பலத்தை விட பெரிய பலம் இல்லை' என்றார்.
பீஹார் தேர்வாணைய பணியாளர் வாரியம் கடந்த டிச., மாதம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
அவரை நேற்று காலை பாட்னா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பின்னர் அவர் விடுதலையானார்.
பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பீஹார் போலீசார் என்னை கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றம் எனது கோரிக்கையை ஏற்று, நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது. மக்கள் பலத்தை விட பெரிய பலம் இல்லை. இது மக்களுக்காக நாங்கள் செய்த போராட்டத்திற்கு கிடைத்த பலன்.
முதலில் எனக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது, ஆனால் நான் அதை நிராகரித்தேன். சிறைக்கு செல்ல தயாராக இருந்தேன். ஆனால் என்னை சிறையில் அடைக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. பின்னர் நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.