ஊருக்குள் நுழைந்த ஆபத்தான ஓநாய்.. அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல்!

22 ஐப்பசி 2024 செவ்வாய் 15:09 | பார்வைகள் : 6168
ஊருக்குள் காட்டு ஓநாய் ஒன்று நுழைந்துள்ளதாகவும், ஆபத்தான இந்த விலங்கு தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சின் தென் மேற்கு மாவட்டமான Haute-Gironde இன் Braud-et-Saint-Louis எனும் சிறிய கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதன் முதலாக ஒக்டோபர் 13 ஆம் திகதி இந்த ஓநாய் ஊருக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிராம மக்கள் தெரிவித்த தகவலை அடுத்து, காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் அவற்றையும் மீறி ஊர் மக்கள் பலரை ஓநாய் கடித்துள்ளதாகவும், மிக ஆக்ரோஷமாக ஓநாய் கடித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
காட்டு விலங்குகளை பாதுகாக்கும் l'Office français de la biodiversité அமைப்பினரும், ஜொந்தாமினரும் இணைந்து, அக்கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஓநாய் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும், இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓநாய் பிடிக்கப்படும் வரை இந்த விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.