◉ 40% சதவீத சட்டத்தை தணிக்கை செய்து குடிவரவு சட்டத்தை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புச் சபை!!

25 தை 2024 வியாழன் 18:04 | பார்வைகள் : 11554
மக்ரோனின் அரசாங்கம் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கொண்டுவந்திருந்த குடிவரவுச் சட்டதிருத்தத்தினை பிரெஞ்சு அரசியலமைப்புச் சபை (Conseil constitutionnel) ஏற்றுக்கொண்டுள்ளது.
பல்வேறு சட்டதிட்டங்களை தணிக்கை செய்ததன் பின்னரே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40% சதவீதமான கட்டுரைகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக சட்டத்தில் உள்ள 86 கட்டுரைகளில் 37 கட்டுரைகள் தணிக்கை மற்றும் மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக காணிச்சட்டம், மாணவர்களுக்கான கல்வி, வெளிநாட்டு பெற்றோர்களுக்குப் பிறந்த பிரெஞ்சு குழந்தைகள் மீதான சட்டம் தொடர்பில் அரசியலமைப்புச் சபை திருத்தம் கொண்டுவந்தது.
பாராளுமன்றத்திலும், செனட் மேற்சபையிலும் ஒரு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், பிரெஞ்சு சட்டப்புத்தகத்தில் அதனை இணைத்துக்கொள்ளக்கூடிய அதிகாரம் அரசியலமைப்புச் சபையிடமே உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த குடிவரவு சட்டத்தை ஆராய்ந்ததன் பின்னர், இன்று வியாழக்கிழமை மேற்படி சட்டத்தினை அச்சபை ஏற்றுக்கொண்டுள்ளது.