Paristamil Navigation Paristamil advert login

இல்லறமே சிறந்த தவம்

இல்லறமே சிறந்த தவம்

5 தை 2024 வெள்ளி 10:15 | பார்வைகள் : 1469


ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற ஆயிரம் ஆயிரம் வழிகள் தர்மத்தில் உள்ளது. உண்மைதான். ஆனால் உறவுகளையும், நட்புகளையும் கொண்ட இந்த உலகை வெல்வதும்... பிறவி பிணியை அறுப்பதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது அதுதான் இல்லறம்.

இல்லறம் என்றவுடன் எம்மில் பலருக்கு இல்லத்தரசியின் நினைவு வரும். எவன் ஒருவன் கட்டிய மனைவியை கடைசி மூச்சு உள்ளவரை கண்கலங்காமல் காப்பாற்றுகிறாரோ... அவன் தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இல்லறமே ஒப்பற்ற தவம்.

எம்முடைய பெற்றோர்கள் வழியிலான கர்மா ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய 21 வயது வரை பின் தொடரும். அதன் பிறகு தான் அவர்களுக்கான கர்மா இயங்கத் தொடங்கும். அதனால் தான் எம்முடைய முன்னோர்கள் 21 வயதுக்கு பிறகு தான் ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் தற்போதைய மூத்தோர்கள் பெண்களுக்கு 21 வயதுக்குப் பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று பாலின சமத்துவத்தை இந்த கருத்திலும் உட்பகுத்தி இருக்கிறார்கள்.

சொந்தம் என்பது கர்மாவின் பழைய பாக்கி என அறிந்தவனுக்கும், அறிந்து கொள்பவனுக்கும் சொந்தம் ஒரு போதும் சுமையாக இருக்காது. நட்பு என்பது பழைய பகை என்பதை பண்புடன் அறிந்தவனுக்கு பதற்றம் ஒருபோதும் ஏற்படாது.

எதிரி என்பவன் எம்முடைய கர்மாவின் தார்மீக கணக்கு என்ற உண்மையை உணர்ந்தால் எதிரி எதிரியாக இருப்பதில்லை. உனது செயலே கர்மாவாக மாற்றம் அடைந்து அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும் உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என்ற பேருண்மையை நீ உணரும் போது எதிரி எதிரே அசுர பலத்துடன் வந்தாலும் உனக்குள் கலக்கம் என்பது துளியும் இருக்காது.

எம்மை உடனிருந்தே துன்புறுத்தும் உறவுகள். உன்னுடன் பிறந்த உன் பழைய கர்மா கணக்கு என புரிந்தால் பந்தம், பாசம், சகோதரத்துவம் மீது எந்தவித பற்றும் அல்லாத ஒரு நிலையை பின்பற்றி பிறவி கர்மாவை எளிதில் வெல்லலாம்.

இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று உம்முடைய கர்மாவின் கணக்கை துல்லியமாக உங்களால் அவதானிக்க முடிந்தால், உங்களுக்கு அருகில் அமரும் மனைவி யார் என்றும் புரியும். மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே கடும் சிரமமான பணி மட்டுமல்ல... அதுதான் உலகிலேயே ஈடுஇணையற்ற சிறந்த தவம்.

கட்டிய மனைவியையும், உன்மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து, உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே உலகின் சிறந்த தர்மம். சிறந்த தவம்.

இந்த பேருண்மையை உணர்ந்து கொண்டதால் தான் எம்முடைய முன்னோர்கள் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினான். 

மேலும் இதனை எளிமையாக 'மனைவி மனம் புழுங்கி அழும் வீடுதான் நரகம் என்றும், மனைவி மனம் விட்டு சிரிக்கும் வீடுதான் சொர்க்கம்' என்றும் குறிப்பிட்டனர். சக்தியை உணர்ந்தால் மட்டுமே சிவம் ஜோதியாகி ஜொலிக்கும் என்ற சூட்சுமமான குறிப்பையும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

எனவே மனைவி மற்றும் பிள்ளைகளை நேசித்து அவர்களுடன் இனிமையான இல்லற வாழ்க்கையை வாழ்ந்து எம்முடைய பிறவி கடனை கழித்து வீடு பேறடைவோம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்