Paristamil Navigation Paristamil advert login

 ரஷ்யா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு 

 ரஷ்யா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு 

2 வைகாசி 2024 வியாழன் 09:32 | பார்வைகள் : 1092


உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வருகிறது. மறுபுறம், ரசாயன ஆயுதங்கள் மீதான சர்வதேச தடையை மீறி ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் வீரர்களை மூச்சுத் திணற வைக்க ரஷ்யா குளோரோபிரின் (chloropicrin) வாயுவை பயன்படுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

நச்சு இரசாயனங்கள் பயன்படுத்துவது நல்லதல்ல. அனால், உக்ரேனியப் படைகளை விரட்டவும், போரில் வியூக வெற்றியைப் பெறவும் ரஷ்யா அவற்றைப் பயன்படுத்துகிறது என்று கூறப்படுகிறது

ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பால் (OPCW) குளோரோபிரின் தடைசெய்யப்பட்டுள்ளது. 

குளோரோபிரின் உடன் சிஎஸ் மற்றும் சிஎன் வாயுக்கள் (CS and CN gasses) நிரப்பப்பட்ட கையெறி குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

நச்சு இரசாயனங்கள் காரணமாக சுமார் 500 உக்ரேனிய வீரர்கள் நோய்வாய்ப்பட்டனர் மற்றும் ஒரு சிப்பாய் மூச்சுத்திணறி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கை-1993 () மீறி உக்ரேனியப் படைகளுக்கு எதிராக குளோரோபிரின் பயன்படுத்தியதாக ரஷ்யா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

குளோரோபிரின் ஒரு விஷ வாயு. இது முதன்முதலில் உலகப் போரின் போது ஜேர்மன் படைகளால் பயன்படுத்தப்பட்டது. ஒருவர் அதை சுவாசித்தால், கடுமையாக நோய்வாய்ப்படுவார்.

1993-ஆம் ஆண்டில், ஹேக் அடிப்படையிலான அமைப்பான ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) இதனை தடை செய்தது. பின்னர், 193 நாடுகள் குளோரோபிரின் கையிருப்புகளை அழித்தன.

வர்த்தக‌ விளம்பரங்கள்