Paristamil Navigation Paristamil advert login

பருப்பு போளி

பருப்பு போளி

12 சித்திரை 2024 வெள்ளி 10:55 | பார்வைகள் : 520


போளியில் காரம் மற்றும் இனிப்பு வகை உள்ளது. அதிலும் பல வகையான இனிப்பு போளிகள் செய்யப்படுகின்றன. ஆனால் தேங்காய் போளி மற்றும் பருப்பு போளி இரண்டும் பரவலாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான பருப்பு போளி வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

மாவு செய்ய தேவையானவை :

மைதா மாவு - 1 கப்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் சிட்டிகை

உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவைக்கேற்ப

பூரணம் செய்ய தேவையானவை :

கடலை பருப்பு - 1/2 கப்

வெல்லம் - 1 கப்

நுணுக்கிய ஏலக்காய் - 4

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை :

முதலில் ஒரு பௌலில் மைதா மாவு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு மாவின் மேற்பரப்பில் எண்ணெய் ஊற்றி குறைந்தபட்சம் இரண்டு, மூன்று மணிநேரம் மூடி ஊறவிடவும்.

அடுத்து கடலை பருப்பை இரண்டு மூன்று முறை நன்றாக அலசி ஒரு குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை விடவும்.

குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து கடலை பருப்புடன் துருவிய வெல்லம் சேர்த்து கலந்து மிதமான தீயில் கெட்டியாகும் வரை சமைக்கவும்.

பூரணம் கெட்டியானவுடன் நுணுக்கிய ஏலக்காய் சேர்த்து கலந்து எடுத்து தனியே ஒரு பௌலில் வைத்துக்கொள்ளவும்.

தற்போது சிறிதளவு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து கைகளை கொண்டு பரப்பி கொள்ளுங்கள்.

பின்னர் அதன் நடுவே பூராணத்தை சிறிதளவு வைத்து மூடி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து எடுத்து கொள்ளவும்.

பிறகு தோசை கல் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள போளியை போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
போளி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான பருப்பு போளி சாப்பிட ரெடி.

வர்த்தக‌ விளம்பரங்கள்