பாகிஸ்தானில் இராணுவ புகையிரதம் மீது கார் குண்டுத் தாக்குதல் -24 பேர் பலி
24 வைகாசி 2026 ஞாயிறு 11:38 | பார்வைகள் : 202
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயணித்த விசேட புகையிரதம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட மிக உக்கிரமான மற்றும் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி இராணுவ வீரர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் ஏற்றிச் சென்ற புகையிரதமே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
புகையிரதம் குவெட்டாவின் சாமன் பட்டாக் பகுதியில் உள்ள சமிஞ்கை ஒன்றைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயிலின் ஒரு பெட்டி மீது மோதி வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஏஃவ்பி செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அதிபயங்கர வெடிப்பின் தாக்கத்தினால் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பிடித்துள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததுடன், வெடிப்புச் சத்தத்தினால் பெரும் பரப்பளவிலான சுற்றியுள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. அத்துடன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஈத் பெருநாளை முன்னிட்டு, விடுமுறையைக் கழிப்பதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணித்த இராணுவ வீரர்களே இந்தத் கொடூரத் தாக்குதலில் சிக்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவ வீரர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த 50க்கும் மேற்பட்டோரில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் வைத்தியசாலை வைத்தியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களை மக்கள் சுமந்து செல்லும் காட்சிகளும், இராணுவத்தினர் அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாதுகாப்பு பலப்படுத்தியுள்ள படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து பலுசிஸ்தான் அரசாங்க அதிகாரி பாபர் யூசுப்சாய் கருத்துத் தெரிவிக்கையில், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலப்பரப்பின் அடிப்படையில் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகவும், நாட்டின் மிக ஏழ்மையான மாகாணமாகவும் பலுசிஸ்தான் விளங்கி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இம்மாகாணம் மிகவும் பின்தங்கியுள்ளது.
இங்குள்ள கணிசமான இயற்கை எரிவாயு இருப்புக்கள் மற்றும் கனிம வளங்களை உள்ளூர் மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் வழங்காமல் பாகிஸ்தான் அரசாங்கம் சுரண்டுவதாக பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வருவதுடன், பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தொடர் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan