Paristamil Navigation Paristamil advert login

25 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா மாறும் ; ராஜ்நாத் சிங்

25 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா மாறும் ; ராஜ்நாத் சிங்

24 வைகாசி 2026 ஞாயிறு 11:50 | பார்வைகள் : 312


அடுத்த 25 அல்லது 30 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா மாறும். இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது,' என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஷீரடியில் வெடிமருந்து உற்பத்தி பிரிவைத் திறந்து வைத்த பிறகு அவர் பேசியதாவது; தங்கள் நாட்டுக்கான ஆயுதங்களைத் தாங்களே தயாரிக்கும் ஒரு நாடுதான் தனது சொந்த எதிர்காலத்தை எழுதும். பாதுகாப்புத் துறையில் தனியார் பங்களிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு மிகக் குறைவாக இருந்தது. தற்போது அது 25 முதல் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை 50 சதவீதமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் வெறும் 'நட்' மற்றும் 'போல்ட்'களை வழங்கும் நிறுவனங்களாக மட்டும் இல்லாமல், அதிநவீன ஆயுத அமைப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களாகவும் மாறியுள்ளன. அரசின் தொலைநோக்குப் பார்வையும், தனியார் துறையின் கண்டுபிடிப்புகளும் இணையும்போது நாடு புதிய உயரங்களை எட்டும்.

ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாகக் கருதப்பட்ட இந்தியா, அடுத்த 25-30 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உருவெடுப்பதைத் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.