Paristamil Navigation Paristamil advert login

திருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் தகவல்

11 மார்கழி 2024 புதன் 10:57 | பார்வைகள் : 5159


மகாதீபத்தின் போது திருவண்ணாமலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அண்மையில் திருவண்ணாமலையில் நிகழ்ந்த மண் சரிவு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது;

8 பேர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்து நேற்று அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக அதிகமான நபர்களை மலையின் மீது ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் மகாதீபத்தின் போது திருவண்ணாமலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

குறைந்தபட்ச மனித சக்தியை பயன்படுத்தும் வகையில் இந்தாண்டு பரணி தீபத்தின் போது 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தீபத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்படும்.

அதற்கான அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. நிபுணர் குழு அறிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு 89 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்கள் நாளை (டிச.12) முதல் டிச.15 வரை இயக்கப்படுகிறது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்