பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 2 காவலர்கள் உட்பட 9 பேர் பலி
14 வைகாசி 2026 வியாழன் 10:20 | பார்வைகள் : 1198
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைப்படை குண்டுத்தாக்குதலில் 2 காவல்துறையினர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துன்கவா மாகாணத்தின் லக்கி மார்வத் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பத்தாக் சௌக் சந்தைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவை தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்கச் செய்ததாகவும், உயிரிழந்தவர்களில் 2 போக்குவரத்து காவல்துறையினரும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து மீட்புப்படையினர் மற்றும் அவசரகால சேவைகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை முன்னெடுத்தனர்.
இந்த வெடிப்பின் தாக்கத்தால் அப்பகுதியில் இருந்த பல கடைகள் மற்றும் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் உடனடியாக செராய் நௌராங் தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பண்ணு மற்றும் பெஷாவர் நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியை பாதிக்க பயங்கரவாதிகளை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அண்டை மாவட்டமான பண்ணுவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 15 காவல்துறையினர் உயிரிழந்த நிலையில், மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan