Paristamil Navigation Paristamil advert login

பிள்ளையான் மருத்துவமனையில் அனுமதி

பிள்ளையான் மருத்துவமனையில் அனுமதி

16 சித்திரை 2026 வியாழன் 19:25 | பார்வைகள் : 1139


கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத் கொழும்பிற்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் கடந்த 02ஆம் திகதி உத்தரவிட்டடிருந்த நிலையிலேயே நேற்று சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்த பிள்ளையான், சுமார் ஒரு வருடங்களின் பின்னர் கடந்த 02ஆம் திகதி மருத்துவ பரிசோதனைகளுக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அன்றையதினமே கொழும்பு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்,  நேற்று மாலை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.