Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் ஈஸ்டர் போர்நிறுத்த மீறல்கள்

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் ஈஸ்டர் போர்நிறுத்த மீறல்கள்

12 சித்திரை 2026 ஞாயிறு 15:28 | பார்வைகள் : 1140


உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் ஈஸ்டர் போர்நிறுத்த மீறல்கள் தொடர்பாக பரஸ்பரம் குற்றம்சாட்டின.

உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கி ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகைக்காக தற்காலிக போர்நிறுத்தம் செய்துகொள்வதாக முடிவெடுத்தன.

ஒரு வாரத்திற்கும் முன்பு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்த ஒரு முன்மொழிவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே இரு நாடுகளும் பரஸ்பரம் ட்ரோன் தாக்குதல் நடத்திக்கொண்டன.

இந்த நிலையில், போர்நிறுத்தத்தை ஆயிரக்கணக்கான முறை உக்ரைனும், ரஷ்யாவும் மீறியதாக பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.

உக்ரேனிய இராணுவத்தின் பொதுப் பணியாளர் குழு, "ஏப்ரல் 12 அன்று காலை 7:00 மணி நிலவரப்படி, 2299 போர் நிறுத்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

28 எதிரித் தாக்குதல் நடவடிக்கைகள், 479 எதிரிப் பீரங்கித் தாக்குதல்கள், 747 தாக்குதல் ட்ரோன்களின் தாக்குதல்கள் மற்றும் 1045 FPV ட்ரோன்களின் தாக்குதல்கள்" என்று முகநூலில் பதிவிட்டுள்ளது.

மேலும், "ஏவுகணைத் தாக்குதல்களோ, வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதல்களோ அல்லது ஷாஹெட் வகை ட்ரோன் விமானத் தாக்குதல்களோ நடைபெறவில்லை" என்றும் கூறியது.

அதேபோல் ரஷ்யாவும் தனது தரப்பு குற்றச்சாட்டினை கூறியுள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், உக்ரைன் தனது தரப்பில் கிட்டத்தட்ட 2,000 போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.