இன்று முதல் வழமைக்கு திரும்புகிறது ஓர்லி விமான நிலையம்!!

20 வைகாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 775
கடந்த இரு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த ஓர்லி சர்வதேச விமான நிலையம், இன்று மே 20, செவ்வாய்க்கிழமை முதல் வழமைக்குத் திரும்புகிறது.
விமான நிலையத்தில் ஏற்பட்ட ரேடார் கருவிகளின் பழுது காரணமாக போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் (contrôle aérien) பாதிக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை 40% சதவீதமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. நேற்று திங்கட்கிழமை 15% சதவீதமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று மே 20, செவ்வாய்க்கிழமை காலை முதல் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (Direction générale de l'aviation civile (DGAC) அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி அனைத்து விமானங்கள் இன்று முதல் இயக்கப்படும் எனவும், கடந்த இரண்டு நாட்களில் மொத்தமாக 130 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாகவும், அவற்றில் சில விமானங்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கும் தருவாயில் இருந்த நிலையில் இரத்துச் செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.