சத்தலேயில் இருந்து புறப்பட்ட தொடரூந்து ஒன்று திடீரென நடு வழியில், சுரங்கத்துக்குள் தடைப்பட்டு நின்றது. தொடரூந்தின் கதவை திறக்கமுடியாமல் பயணிகள் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, சத்தலே (Châtelet) நிலையத்தில் இருந்து 8.13 மணிக்கு புறப்பட்ட முதலாம் வழி மெற்றோ தொடரூந்து, Bastille மற்றும் Saint-Paul நிலையங்களுக்கிடையே தடைப்பட்டு நின்றது. சுரங்கத்தின் நடுவில் திடீரென தொடரூந்து தரித்து நின்றதால் பயணிகள் அச்சத்தில் மூழ்கினார்கள். RATP ஐ தொடர்புகொள்ள பலர் முயற்சித்ததாகவும், ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். தொடரூந்துக்குள் மிக கடுமையான வெப்பம் நிலவியதகவும், மூச்சு எடுக்ககூட சிரமாக இருந்ததாகவும் பயணிகள் அச்சத்துடன் குறிப்பிட்டனர்.
தொடரூந்தின் கதவினை தாம் திறக்க முற்பட்டதாகவும், ஆனால் தானியங்கி கதவு என்பதால் திறக்க முடியவில்லை எனவும் பயணிகள் குறிப்பிட்டனர். குளிரூட்டிகள் வேலை செய்யவில்லை எனவும், கர்பினி பெண் ஒருவர் அச்சத்தில் அழுதுகொண்டிருந்ததாகவும், தொடரூந்துக்குள் ஒரு வழியாக தண்ணீர் போத்தல் ஒன்றை கண்டுபிடித்து அவருக்கு வழங்கியதாகவும் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக தொடரூந்து சிக்கிக்கொண்டதாகவும், 9 மணிக்கு தொடரூந்து இயங்கும் எனவும், பயணிகள் பயப்பிடத்தேவையில்லை எனவும் RATP இனால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 9 மணி தாண்டியும் தொடரூந்து நகரவில்லை.
RATP இடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும் தெரிவித்த பயணிகள், பின்னர் ஒருவழியாக போராடி தொடரூந்தின் கதவை திறந்து அதுவழியாக தாம் வெளியேறியதாக குறிப்பிட்டனர். சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ள Hôtel de Ville நிலையத்தை நோக்கி தாம் சுரங்கத்தினூடாக நடந்து சென்றதாகவும் குறிப்பிட்டனர்.
'அவசர வெளியேற்றத்துக்கான வழிகள் எதுவும் அமைக்கப்படவில்லை' என பல வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கவலையோடு குறிப்பிட்டனர். 'தீப்பிடித்து எரிய நேர்ந்தால் அனைவரும் இறக்க நேரிடும்' என பிரித்தானியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து நள்ளிரவு தாண்டி 1.50 மணி அளவில் இயல்புக்குத் திரும்பியது.
|